மதுரையில் ஆர்பாட்டம்


ஓவியர் அணியின் மாவட்டச் செயலாளர்
இராசேந்திரன் ஒன்றிய அமைப்பாளர் ரவி  ஆகியோரின் படுகொலையை கண்டித்தும்,
தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், வன்கொடுமை
தடுப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைபடுத்தக் கோரியும், மதுரையில் ஆர்பாட்டம்


 தமிழகத்தில் ஆதிக்க சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்
மீது தாக்குதல் நடத்துவதும், அம்மக்களை வெட்டி படுகொலை செய்வதும்,
தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் பள்ளி
கல்லூரிகளில் படிக்கின்ற தலித் மாணவிகளும் தப்பவில்லை. அவர்களும் வக்கிர
புத்திக்கொண்ட சாதிவெறிக் கயவர்களால் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுத்தி
கொலை செய்யப்படுகிறார்கள்.  நாமக்கல்லில் காயத்திரி என்கிற கல்லூரி
மாணவியும்,   வானூரில்  திவ்யா என்கிற பள்ளி மாணவியும் கற்பழித்து
படுகொலை செய்யப்பட்ட போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் மற்றும்
அதன் தோழமை இயக்கத்தினர் மட்டுமே போராடினார்கள் என்பது அனைவருக்கும்
நினைவிருக்கும்.





  டெல்லியி.....லே  கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு..... தமிழகத்திலே
பொங்கியெழுந்து  வீதிக்கு வந்து போராடிய அமைப்புகள்    காயத்திரி, திவ்யா
ஆகியோர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட போது இந்த அமைப்புகள் எல்லாம்
முனைப்பு காட்டவில்லை.  இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த
மாணவிகள் என்கிற ஒரே காரணத்திற்காகவே  இந்த தமிழ் மாணவிகளுக்காக
போராடுவதற்கு எந்த ஒரு அமைப்பும் முன்வரவில்லை என்பதனை தமிழகத்தில்
புரையோடிக்கிடக்கின்ற சாதியச் சிந்தனை நிரம்பிய இந்த சமுதாயம், தமிழ்
உணர்வாளர்களிடத்திலும், பிற மொழி பேசக்கூடிய மனித இன
உணர்வாளர்களிடத்திலும் மௌனமாகவே விளக்கி விட்டது.

 ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பாதிக்கப்பட்ட,  மக்கள்
காவல்துறையினரிடத்தில் சென்று நியாயமான முறையில் கொடுக்கும் புகார் மனு
மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கே இந்த  மக்கள் கொடி பிடித்து  காவல்
நிலையத்தை முற்றுகையிடும் அவலநிலை தமிழகத்தில் மட்டுமே உள்ளது.  நாம்
போராடி  வழக்கு பதிவு செய்துவிட்டால்  கூட குற்றவாளிகள் எளிதில்
தப்பிவிடும் வகையிலே சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு
செய்துவிடுகிறார்கள். ஆனால்  வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் மீது
கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வதில்  காவல்துறை அதிகாரிகள்
மிகவும் நேர்த்தியாகவே  பயிற்சி பெற்றுள்ளனர்.  எந்த ஒரு அரசியல்
பிண்ணனியும் இல்லாத  தாழ்த்தப்பட்டவனின் தலைமையை ஏற்று,
தாழ்த்தப்பட்டோர் அல்லாத முற்போக்கு சிந்தனையுள்ள மக்களும் விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியில் நாற்பது விழுக்காடுகளுக்கு மேல் உள்ளார்கள்
என்பதனை மறந்து,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சில காவல்துறை
அதிகாரிகள்  சாதியக்  கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்கள். அதனால்தான்
சென்னையில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை பேரணிக்காக உரிய அனுமதிபெற்று
மதுரையில் வைக்கப்பட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகளின் விளம்பர  பதாகைகளை
காவல் துறை அதிகாரிகள் நடு இராத்திரியில் ஏணியில் ஏறி கழற்றியெறிந்து தன்
சாதிவெறியை காட்டியுள்ளனர். .


தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், அம்மக்களின் அரசியல்
அதிகாரத்திற்காகவும், எழுச்சியை ஏற்படுத்தும் வலிமையுள்ள தலித்
தலைவர்களுக்கும், தலித் மக்களின் பிரதிநிதிகளுக்கும், பாதுகாப்பற்ற சூழல்
 தமிழகத்தில் உள்ளது. நாகை மாவட்டம்    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
ஓவியர் அணியின் மாவட்டச் செயலாளர் இராசேந்திரன், ஒன்றிய அமைப்பாளர் ரவி
ஆகியோர்  பாதுகாப்பற்ற சூழலில்தான் ஆதிக்க சாதிவெறியர்களால் வெட்டி
படுகொலை செய்யப்பட்டனர்.  திண்டுக்கல்லில் தமிழ்நாடு தேவேந்திரகுல
வேளாலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணன் பசுபதிபாண்டியன் அவர்களும்  இதே
சூழலில்தான் ஆதிக்க சாதிவெறியர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளர்
அம்பேத்வளவன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தியாகி இம்மானுவேல்
சேகரனார் நினைவு நாளில் அஞ்சலி செலுத்தச்சென்ற தோழர்களின் மீது காவல்துறை
நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  ஏழு பேர் படுகொலையான அரச பயங்ரவாதம்,
தருமபுரியில் மூன்று தலித் கிராமங்கள் குச்சி கொழுத்திகளால்
எரிக்கப்பட்டது,  மதுரையில் சட்ட மாமேதை புரட்சியார்
டாக்டர்.அம்பேத்கார் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சிலைகள்
உடைத்தெறியப்பட்டது. மதுரை வண்டியூர் தீர்த்தக்காட்டிலே தாழ்த்தப்பட்ட
மக்களின் இடங்களை ஆக்கிரமிப்பு செய்த ஆதிக்க சாதிவெறியர்களை தட்டிக்
கேட்ட கண்ணன், கரிகாலன் ஆகியோர் வெட்டி படுகொலை, திருமங்கலம்
தங்களாச்சேரியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நாகரீகமான வளர்ச்சியை கண்டு
பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதிவெறியர்களின் ஊர் கட்டுப்பாட்டை மீறி
வெள்ளை வேட்டிச் சட்டையணிந்து தெருவுக்குள் நடந்த ஆதித் தமிழர் பேரவையைச்
சார்ந்த முதியவரை அரிவாளால் வெட்டிய பயங்கரம் என தாழ்த்தப்பட்டவர்கள்
மீது திணிக்கப்படும்  அடுக்கடுக்கான வன்கொடுமைகளும், படுகொலைகளும்
தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

மதுரையில் இருக்கக்கூடிய எவிடன்ஸ் என்கிற தொண்டு நிறுவனத்தின்  நிறுவனர்.
திரு.கதிர் அவர்கள் தி இந்து என்கிற நாளேட்டில் 2012-ல் தான் அதிகமான
வன்கொடுமைகள்  நடைபெற்றுள்ளது என தனது கட்டுரையில் எழுதியிருந்தார்
என்பதனை எழுச்சித் தமிழர் அவர்களும், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுமே
சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் 2013-ல்  இந்த நான்கு மாதங்களில் மட்டுமே
நடந்த வன்கொடுமைகள் 2012-ஐ பின்னுக்கு தள்ளிவிடும் அளவிற்கு சாதியக்
கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.


இந்த தாழ்த்தப்பட்ட மக்களின்  உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும்
வரையறுக்கப்பட்ட வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை செயல்படுத்தக் கூடிய தமிழக
அரசும், இச்சட்டங்களை  தீவிரமாக அமுல்படுத்தாமல் இருப்பது,  சாதி
மோதல்களை உருவாக்கும் சாதியத் தலைவர்களுக்கும், சாதிச் சங்களுக்கும்
தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்களை நடத்தவும்,  இம் மக்களை படுகொலை
செய்யவும் ஆயுதங்களை தமிழகஅரசே வழங்குவது போல் உள்ளது. தாழ்த்தப்பட்ட
மக்களுக்கெதிரான பயங்கரவாதத்திற்கு தமிழகஅரசே துணை போகிறது. ஈழத்திலே
தமிழீழ மக்களின் மீது சிங்கள இன வெறியன் இராஜபக்சே நடத்திய  தாக்குதலை
தடுத்து   நிறுத்தாமல்  மத்திய அரசு எப்படி வேடிக்கை பார்த்ததோ,
அதைப்போலவே  தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டேதான் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையை தமிழகஅரசு மாற்றிக்கொள்ள வலியுறுத்தியும்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஓவியர் அணியின் மாவட்டச் செயலாளர்
இராசேந்திரன் ஒன்றிய அமைப்பாளர் ரவி  ஆகியோரின் படுகொலையை கண்டித்தும்,
தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், வன்கொடுமை
தடுப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைபடுத்தக் கோரியும், மதுரையில்
சித்திரைத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நெருக்கடியான நேரத்தில்
22-04-2013 அன்று காலை 10.00 மணியளவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்
மதுரை மாவட்ட ஓவியர் அணியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்,
ஓவியர் அணியின் மாநில துணைச்செயலாளர் ப.முதல்வன் தலைமையில் மதுரை மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது.

  மாநில துணைப்பொதுச் செயலாளர் வெ.கனியமுதன், மாநகர் மாவட்டச் செயலாளர்
இரா.பாண்டியம்மாள்,  க.கலைவாணன், முற்போக்கு மாணவர் கழக மாநிலத்
துணைச்செயலாளர் வழக்கறிஞர் வி.பி.இன்குலாப், பூபாலன், மாதவன்,
தென்னிலவன், ரேவதிகடம்பு,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இரா.அய்யங்காளை, கொ.ஆறுமுகம்,   அ.மணியரசு,  பனையூர் சேகர்,  ராக்கப்பன்,
விடுதலை புலியம்மாள்,  வழக்கறிஞர்.ப.இரவிக்குமார், சிறுத்தைக்கனி,
அழகர்(எ)தமிழழகன்,வரிச்சியூர் பூமிநாதன், , பா.ஆனந்த்,    பரமசிவம்,
ஆதிவளவன்,   உசிலை பழனிச்சாமி, , அச்சம்பட்டி மகாலிங்கம்,  தலித்
அய்யனார், கலைச்செல்வன், செந்தமிழன், ராசுக்குட்டி, கு.செல்வமணி,
முத்துக்குமார், எஸ்.எம்.பி. கண்ணன்,  முனிச்சாமி, மோகனம்பாள்,  நிலையூர்
கணேசன், கள்ளிக்குடி பாலா, கொட்டாம்பட்டி விஸ்வநாதன், பா.அமுதவாணன்,
மற்றும்....நகர , ஒன்றிய , முகாம் நிர்வாகிகள்  பலர்  கலந்து   கொண்டனர்.
 கரும்பாலை முகாம் செயலாளர் திருமா தேவன், ஓவியர்கள் சு.ஆதவன்,
புதுதாமரைப்பட்டி ஓவியர்.நா.அழகர்சாமி
ம.எழில்,  ம.சரவணன், வே.பாலமுருகன், கருவளவன்,அவனிநாவளன் உள்ளிட்டோர்
நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

-ஓவியர்.நா.அழகர்சாமி

0 comments:

கருத்துரையிடுக