திருமாவளவன்
லங்கையில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் 'புதிய வீடுகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைப்பதற்காக ரஜினிகாந்த் இலங்கை செல்லவிருக்கிறார்' என்ற செய்திகள் கசியத் தொடங்கியதுமே, 'ரஜினி இலங்கைக்குப் போகக்கூடாது' என்ற முதல் எதிர்ப்புக் கோரிக்கையை வைத்தவர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். இப்போது, ரஜினியே தான் போகவில்லை என்று அறிவித்துவிட்ட பிறகு, விவகாரம் வேறு திசைக்குத் திரும்பியிருக்கிறது. இந்த நிலையில், திருமாவளவனைச் சந்தித்துப் பேசினோம்...
“ரஜினி, இலங்கை செல்லவிருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளிவராத நிலையிலேயே, 'ரஜினி, இலங்கை செல்லக்கூடாது' என்று எந்த அடிப்படையில் எதிர்ப்புக்குரல் கொடுத்தீர்கள்?”
“இலங்கையில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களுக்காக லைகா நிறுவனம் சார்பில், சுமார் 50 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அதன் திறப்பு விழாவுக்காக ரஜினிகாந்த வரவிருப்பதாகவும் அங்குள்ள வடமாகாணத் தமிழ்த் தலைவர்கள் சிலர் என்னிடம் தகவல்கொடுத்தனர். மேலும்,  இப்போது உள்ள சூழ்நிலையில், ரஜினியின் வருகை வரவேற்கத் தக்கதாக இல்லை. எனவே, அவரை வரவேண்டாம் என்று எடுத்துச் சொல்லுங்கள் என கோரிக்கையும் வைத்தனர். அதனை ஏற்று, ஊடகம் வாயிலாக நாங்களும் 'ரஜினி, இலங்கை செல்லக்கூடாது' எனக் கோரிக்கை வைத்தோம். அவரும், பெருந்தன்மையாக 'செல்லவில்லை' என அறிவித்திருக்கிறார். அதற்கு முதலில் ரஜினிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
வீடுகளை இழந்து, வாழ்விடங்களை இழந்து, சொந்தங்களை இழந்து என லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இப்போதும் துயரங்களை அனுபவித்துவருகிறார்கள். சிங்கள அரசின் இந்த ஈவிரக்கமற்ற கொடுஞ்செயலை உலக நாடுகள் எல்லாம் கண்டித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியொரு இக்கட்டான சூழலில், ரஜினிகாந்த் இலங்கைக்குச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வாரேயானால், அது, தமிழ் மக்களின் பரிதவிப்புகளை எல்லாம் வெளியுலகுக்குத் தெரியாவண்ணம் புதைத்துவிடுவதோடு, 'சமதர்மம் மிக்க ஜனநாயக நாடு' என்ற பெயரையும் இலங்கைக்கு வாங்கிக்கொடுத்துவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால்தான், அப்படியொரு கோரிக்கையை நாங்கள் வைத்தோம்''.
''சம்பந்தன் உள்ளிட்ட வடமாகாணத் தலைவர்களே, ரஜினிகாந்த் இலங்கை வருவதை வரவேற்கிறார்களே..?''
''சம்பந்தன் உள்ளிட்ட சில தமிழ்த் தலைவர்கள், ஆரம்பத்திலிருந்தே மைத்ரிபாலா அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுபற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், அங்குள்ள பொதுமக்கள் மத்தியில், 'இப்போதுள்ள சூழலில், ரஜினிகாந்த் இலங்கைக்கு வந்தார் என்றால், அது மைத்ரிபாலா சிறீசேனாவின் ஆளும் அரசுக்கு சாதகமாகத்தான் இருக்கும்' என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 'இப்போதைய சூழலில்தான் ரஜினிகாந்த் வரவேண்டாம்' என்கிறார்களே தவிர, எப்போதுமே வரவேண்டாம் என்று அவர்களும் சொல்லவில்லை; நாங்களும் சொல்லவில்லை''.
திருமாவளவன்''போரினால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு சிறு அளவிலான உதவியும்கூட பெரிய நிவாரணமாக இருக்கும் என்று ஈழ மக்களே கூறிவரும் வேளையில், இதுபோன்ற போராட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் ஒரு பின்னடைவாகத்தானே இருக்கும்?''
''லைக்கா நிறுவனம் 150 வீடுகளைக் கட்டவில்லை. வெறும் 50 வீடுகளைத்தான் கட்டியிருக்கின்றன. மீதம் உள்ள 102 வீடுகள் இந்திய அரசு கொடுத்திருந்த நிவாரணத் தொகையைக்கொண்டு கட்டப்பட்டது. அதாவது, சிங்கள அரசாங்கத்தின் ஒப்பந்தப் பணியை எடுத்துத்தான் லைகா நிறுவனம் இந்த வீடுகளைக் கட்டியிருக்கிறது. இதுபோன்று, புதிய வீடுகளைக் கட்டி திறப்புவிழா நடத்துவதென்பது அடிக்கடி நடக்கக்கூடிய நிகழ்வுதான். ஆனால், இப்போது ரஜினியை ஏன் அழைத்து திறப்புவிழா நடத்த வேண்டும் என்று லைகா நிறுவனம் ஏன் விரும்புகிறது என்றால், அவரை ஹீரோவாக வைத்து, '2.0' என்ற திரைப்படத்தை அந்நிறுவனம்தான் எடுத்துவருகிறது.
இந்தச் சூழலில், ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்துகொண்டால், '2.0' படத்துக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்து, லாபம் ஈட்ட முடியும் என்று லைகா நிறுவனம் நினைக்கிறது. கூடவே, மைத்ரிபாலா சிறீசேனா அரசும் தமிழர்களுக்கு நல்லது செய்துவருகிறது என்ற பொய்யான செய்தியும் உலக அரங்கில் பரப்பப்படும் வாய்ப்பு உண்டாகிவிடும். ஆக, வணிக அரசியல் உள் நோக்கங்கள் கொண்டதாலேயே இவ்விஷயத்தில் எங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தோம். 
ரஜினிகாந்த் போகாததாலேயே தமிழர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படாமல் விட்டுவிடப்படும் என்ற சூழல் கிடையாது. ஏற்கெனவே, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆயிரக்கணக்கான கோடிகளை இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுத்துள்ளது. ஆனால், அதில் 15 சதவிகிதப் பணத்தைக்கூட சிங்கள அரசு தமிழ் மக்களின் நலனுக்காகச் செலவிடவில்லை. இந்தியா கொடுத்த 1000 டிராக்டர்களில் 80 சதவிகித டிராக்டர்களை சிங்களவர்களுக்குத்தான் கொடுத்துள்ளது. தமிழ் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய உதவிகள் முழுவதுமாக கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கமே தவிர, உதவிகள் கிடைக்கக்கூடாது என்று தடுப்பதல்ல எங்கள் நோக்கம்.''
'' 'கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை சென்று, ராஜபக்‌ஷேவுடன் விருந்து உண்டுவந்த திருமா, தற்போது ரஜினி இலங்கை செல்லக்கூடாது என்று சொல்லலாமா?' என வலைதளங்களில் உங்களுக்கு எதிரான கேள்விகள் எழுப்பப்படுகிறதே?''
''அது மத்திய அரசு அமைத்த ஒரு குழு. அதில் என்னையும் சேருங்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், என் பெயரும் அந்தக் குழுவில் இணைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னர்தான், எனக்கே தெரியவந்தது. அப்போதும்கூட, நான் போகவிரும்பவில்லை என்றுதான் என் கட்சியினரிடம் எடுத்துச் சொன்னேன். ஆனால், 'பாதிக்கப்பட்ட நம் தமிழ்ச் சொந்தங்களைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகத்தான் நாம் போகிறோம். அதனால், மறுக்காமல் போய்வாருங்கள்' என்றுதான் சொல்லியனுப்பினார்கள்.  'போகிற 10 பேர்களில், நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகத்தான் போகிறேன்' என்று சொல்லித்தான் நானும் சென்றேன்.
அங்கே சென்றபிறகு, ராஜபக்‌ஷேவுடன் ஏன் கைகொடுத்தீர்கள்? அவர்கள் கமென்ட் அடிக்கும்போது ஏன் சிரித்தீர்கள்? என்றெல்லாம் என்னைக் கேள்வி கேட்கிறார்கள். அவை நாகரீகம் என்ற ஒன்று இருக்கிறது. எவ்வளவுதான் நமக்கு உள்ளுக்குள் கோபம் இருந்தாலும், அவை நாகரீகத்தை மீறி எதுவும் செய்துவிட முடியாது. அப்போதும்கூட, 'இவர் பிரபாகரனின் ஆள். பிரபாகரன் இருந்தபோது இவர் வந்திருந்தால், இவரும் மேலோகம் போயிருப்பார்' என்றுதான் என்னை கமென்ட் அடித்தார் ராஜபக்‌ஷே. அந்த இடத்தில், 'எப்படிடா என்னை நீ இப்படிச் சொல்லமுடியும்?' என்று நான் சண்டைக்கா போகமுடியும்? இதுமட்டுமல்ல... வெளிவிவகாரத்துறை அமைச்சர் எங்களுக்கு ஆளுக்கு ஒரு டீத்தூள் பொட்டலத்தைப் பரிசாகத் தந்தார். எல்லோரும் அதை வாங்கினோமே தவிர, யாரும் இங்கே கொண்டுவரவில்லை; அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டோம். ஆனால், இங்கே உள்ள காழ்ப்புஉணர்ச்சி கொண்டவர்கள்தான் இப்படியெல்லாம் எங்களுக்கு எதிராக செய்திகளைப் பரப்புகிறார்கள்.'' 

நன்றி : விகடன்
பொதுமக்களை அவமானப்படுத்தும் மோடி அரசைக் கண்டித்தும்;
ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலக வலியுறுத்தியும்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 18 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தொல்.திருமாவளவன் அறிவிப்பு
 
 

500, ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நாளிலிருந்து ஏழை எளிய மக்கள் சொல்லவொண்ணா துன்பத்துக்கு ஆளாகிவருகின்றனர். மோடி அரசின் சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை இருபத்தைந்து பேர் உயிரிழந்துள்ளனர். தமது குழந்தைகளுக்கு உணவு தர முடியவில்லையே என்ற கவலையில் பெண்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வரிசையில் நின்ற முதியவர்கள் அங்கேயே மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளனர். ஏடிஎம்கள் செயல்படவில்லை; வங்கிகளிலும் பணம் இல்லை. தமது சொந்தப் பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் அல்லல்படுகின்றனர். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தன் உயிருக்கு ஆபத்து என நாடகமாடுகிறார் பிரதமர் மோடி. 
 
கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அந்தப் பணத்தையெல்லாம் வெளிநாட்டு வங்கிகளில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்றும் அதை மீட்டு ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கணக்கிலும் பதினைந்து லட்ச ரூபாய் டெபாசிட் செய்வேன் என்றும் வாய்ச்சவடால் அடித்த பிரதமர் மோடி இப்போது அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றில் அடித்திருக்கிறார். தனது சொந்தப் பணத்தை எடுப்பதற்காக வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு கை விரலில் மை வைக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை இப்போது மோடி அரசு வெளியிட்டிருக்கிறது. சட்டத்தை மதிக்கும் மக்களை இதைவிட மோசமாக எவரும் அவமானப்படுத்தமுடியாது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
 
ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்குவதால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என்பதைப் பொருளாதார நிபுணர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இப்படி அறிவிக்கப்போகிறோம் என்பதை தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வெளிப்படுத்தி இந்த அறிவிப்பில் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் மோடி அரசு மீது இப்போது எழுந்துள்ளது. 
 
* பொதுமக்களுக்கு எதிரான இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். 
 
*வழக்கம்போல 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். 
 
*பொதுமக்களுக்கு இன்னல் உண்டாக்கிய ரிசர்வ் வங்கி ஆளுநர் இதற்குப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி விலகவேண்டும். 
 
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை சென்னையில் எனது தலைமையில் (தொல்.திருமாவளவன்) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இவண்
தொல்.திருமாவளவன்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரா? அல்லது ராணுவ சர்வாதிகாரியா?  500, 1000 ரூபாய் செல்லாது என்ற 
அறிவிப்புக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்



நேற்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய அரசு அறிவித்துள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு செல்லாமல்போகும் என்ற செய்தியை இரவு எட்டு மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏடிஎம்கள் இரண்டு நாட்களுக்கு இயங்காது, வங்கிகள் மூடப்பட்டன என்ற அடுக்கடுக்கான அறிவிப்பால் நேற்று நள்ளிரவு முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. பயணம் செய்யப் போனவர்கள் பேருந்தில் ஏற முடியவில்லை, ஓட்டலுக்குச் சென்றவர்கள் சாப்பிட முடியவில்லை.

ஏழை-எளிய மக்கள் தமது கையிலிருக்கும் ஒன்றிரண்டு 500 ரூபாய் நோட்டுகளும் செல்லாமல் போய்விட்டன என்பதையறிந்து செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். இந்த அறிவிப்பு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கும், கள்ளநோட்டுகளைத் தடுப்பதற்கும் பயன்படும் என மோடி கூறியிருக்கிறார். இது அப்பட்டமான ஏமாற்று என்பதைத் தவிர வேறல்ல. கணக்கில் வராத பணமே கறுப்புப் பணம். அதை வைத்திருப்பவர்கள் காகிதப் பணமாக அதை மூட்டை கட்டி வைத்திருப்பதில்லை. அதுபோலவே இந்தியாவின் 90 விழுக்காடு சொத்து வெறும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் இருக்கிறது.
 
மோடியின் பிரச்சாரத்துக்குப் பெரும் பணத்தை செலவிட்டு அவரைப் பிரதமரக அமர வைத்திருக்கும் அம்பானியோ, கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடியின் ஆதரவால் அசுர வளர்ச்சி கண்டிருக்கும் அதானியோ, மோடிக்கு ஒத்து ஊதும் கார்ப்பரேட்டுகளோ கணக்கில் காட்டாத கறுப்புப் பணத்தை காகிதப் பணமாக மூட்டை கட்டி வைத்திருப்பதில்லை. அவர்களது பணம் அயல்நாடுகளில் பாதுகாப்பாக இருக்கிறது. இது மோடிக்கு நன்றாகவே தெரியும்.
 
“நான் பிரதமரானால் அயல்நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குத் திரும்பக்கொண்டுவந்து இந்திய குடிமகன் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாயை டெபாசிட் செய்வேன்” என தேர்தல் நேரத்தில் கொடுத்த ஜம்பமடித்த மோடி, அதைச் செய்யமுடியாத தனது தோல்வியை மறைப்பதற்காக ஆடுகிற கேலிக்கூத்துதான் இது.
 
இந்தியாவில் கறுப்புப் பணத்தின் ஊற்றுக் கண்ணாக இருப்பது இங்கிருக்கும் தேர்தல் முறைதான். 2014 பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் தமது கட்சியிடமிருந்து பெற்றதாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த கணக்கில் உள்ள தொகைக்கும் பாஜக தனது கணக்கில் காட்டியிருக்கும் தொகைக்கும் பலகோடி ரூபாய் வித்தியாசம் இருக்கிறது என்பதை ஏடிஆர் இந்தியா என்ற அமைப்பு அம்பலப்படுத்தியது. தேர்தல் செலவை அரசே ஏற்றுக்கொண்டு தேர்தலை நடத்த முன்வந்தால்தான் கறுப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணை முற்றாக அடைக்கமுடியும்.
 
மோடி அரசாங்கத்தின் இந்த அறிவிப்பால் ஏழை-எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். “நாட்டுக்காகத் தியாகம் செய்யுங்கள் “வங்கிகளுக்கு வருவோர் கண்காணிக்கப்படுவார்கள்” என்றெல்லாம் அதிகாரிகள் பேசுகின்றனர். இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் கேட்ட அதே வார்த்தைகளை இப்போது நாம் மீண்டும் கேட்கிறோம். இது “ பொருளாதார அவசரநிலை” இதைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் “அரசியல் அவசரநிலை” அறிவிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. மோடியின் இந்த ‘துக்ளக் தர்பாரை’ கண்டுகொள்ளாமல் விட்டால் அடுத்து மிகப்பெரும் ஆபத்து நாட்டுக்கு வந்துசேரும். இந்தியாவிலுள்ள ஜனநாயக சக்திகள் மோடி அரசின் ‘பொருளாதார அவசரநிலையை’ எதிர்த்து முறியடிக்க ஒன்றுதிரளவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறைகூவல் விடுக்கிறோம்.
 
இவண்
தொல்.திருமாவளவன்
தலித்துகளின் விடுதலைக் கருத்தியலில் ஈடுபாடு கொண்டவரும், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் மீது நீங்கா அன்பும், பற்றும் கொண்டிருந்தவருமான கவிஞர் அண்ணாமலை அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தம் மீது அன்பு கொண்டிருந்தவருக்கு நேரில் சென்று தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி, பிள்ளை மற்றும் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னார்.









'எனக்கு பிடிச்ச தலைவர் திருமாவளவன்.. அவருக்கு பாட்டு எழுதுவது ரொம்ப பிடிக்கும்னு சொல்லுவீங்களே.. இப்ப அவரே வந்திருக்காரு பாருங்க' என்று அண்ணாமலை அவர்களின் மனைவி கதறியது எல்லோரையும் கண் கலங்க வைத்தது. கடந்த பொங்கலுக்கு தலைவர் தனக்கு பரிசளித்த பட்டு வேட்டி, சட்டையை அவ்வப்போது சொல்லி விரும்பி அணிவாராம். இன்றும் அதே பட்டு வேட்டியைத்தான் அவர் உடல் மீதும் போர்த்தியிருப்பதாக அவரது மனைவி தெரிவித்தார். இடுகாடு வரையிலான இறுதி ஊர்வலத்திலும் தலைவர் அவர்கள் இறுதி வரை நடந்தே சென்று பங்கெடுத்தார்.

கவிஞர் அண்ணாமலை அவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், கட்சியின் சார்பில் செம்மார்ந்த வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வன்னி அரசு.










புழல் சிறையில் ராம்குமார் மர்ம மரணம் : சிறைத்துறை- காவல்துறை - கிரிமினல்கள் கூட்டணி
உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் 
விசாரணைக் குழு அமைத்திடுக!
தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
 

சுவாதி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர் மின்சார வயரைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டார் என சிறை அதிகாரிகள் சொல்வது நம்பும்படியாக இல்லை. எனவே ராம்குமாரின் மரணம் குறித்து விசாரிக்க தற்போது பணியிலிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணக் குழு ஒன்றை அமைத்திடவேண்டும் என தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

ராம்குமார் கைதுசெய்யப்பட்டபோது அவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தாரென காவல் துறையினர் கூறினார்கள். ஆனால் அதை ராம்குமாரும், ராம்குமாரின் தந்தையும், அவரது வழக்கறிஞரும் மறுத்ததோடு போலீஸார்தான் தனது கழுத்தை அறுத்துக் கொலைசெய்ய முயற்சித்தார்கள் என்று ராம்குமார் தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். கழுத்தை அறுத்த மர்மமே விலகாத நிலையில் மிகுந்த பாதுகாப்பு கொண்ட நவீன முறையில் கட்டப்பட்ட புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் திடீரெனத் தற்கொலை செய்துகொண்டுவிட்டதாக சிறை அதிகாரிகள் கூறுவது எவராலும் நம்பமுடியாத கதையாக இருக்கிறது.

ராம்குமார் தற்கொலை செய்துகொண்டது உண்மையாக இருந்தால் அவரது வழக்கறிஞர் தொலைபேசியில் கேட்டபோது ராம்குமார் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாததால் வாந்தியெடுத்தாரெனவும் அதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறாரெனவும் ஒரு தவறான தகவலை ஏன் சிறை நிர்வாகம் கூறவேண்டும்? இன்னும் ஒருசில நாட்களில் ராம்குமாரின் பிணைக்கான மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் இப்படித் திடீரென அவர் இறந்திருப்பது பலத்த சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

” சிறைச்சாலையில் நடக்கும் எந்தவொரு தவறுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும்; தணடனைக் கைதியோ விசாரணைக் கைதியோ உயிர் வாழ்வதற்கான அவரது அடிப்படை உரிமையைப் பாதுகாக்கவேண்டியது சிறை அதிகாரிகளின் பொறுப்பு “ என நீலாவதி பெஹரா எதிர் ஒரிசா மாநில அரசு ( 1993) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ” சட்டத்தின் நோக்கம் பொது அதிகாரத்தை சீர்திருத்துவது மட்டும் அல்ல, தமது நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கிற சட்ட அமைப்பின்கீழ் தாங்கள் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதுதான்” எனவும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புழல் சிறை அதிகாரிகள் மதிக்கவில்லை, தமிழக அரசாங்கமும் சிறையில் இருப்போரின் நலன் குறித்து கவலைப்படவில்லை.அதைத்தான் ராம்குமாரின் மர்ம மரணம் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.  

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கடந்த ஒருசில ஆண்டுகளாகவே ஏராளமான மர்ம மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சிறை நிர்வாகம் தாக்கல்செய்த பதில் மனுவில் 2000 க்கும் 2013 ஆம் ஆண்டுக்கும் இடையே 1155 பேர் தமிழக சிறைகளில் மரணம் அடைந்துள்ளனர் எனக் கூறியது. அதாவது நான்கு நாட்களுக்கு ஒருவர் தமிழக சிறைகளில் மரணம் அடைகிறார். இது இந்திய அளவில் மிகவும் அதிகம்.

சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் பெருகிவரும் குற்றங்களுக்கு காவல்துறை,சிறைத் துறை,கிரிமினல்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் இடையே எற்பட்டுள்ள கூட்டணியே முதன்மையான காரணமாகும். அண்மையில் சிறைக்குள் பேரறிவாளன் தாக்கப்பட்டிருப்பது இதற்கொரு சான்று.

ராம்குமார் மர்ம மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்படும் விசாரணைக் குழு காவல்துறை,சிறைத் துறை,கிரிமினல்களின் கூட்டணி குறித்தும் விசாரிக்கவேண்டும். அதற்கேற்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்