சாதிவெறியர்களால் காஞ்சி அம்பேத்கர்வளவன் படுகொலை வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்!


சாதிவெறியர்களால் காஞ்சி அம்பேத்கர்வளவன் படுகொலை
வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தைத் 
தீவிரப்படுத்த வேண்டும்!
தொல். திருமாவளவன் கோரிக்கை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்டத் துணைச் செயலாளர் நாராயணன் (எ) அம்பேத்கர்வளவன் அவர்களை 9-12-2012 அன்று இரவு சாதி வெறிபிடித்த சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பையும் நல்லாதரவையும் பெற்று போற்றுதலுக்குரிய ஒரு போராளியாக வளர்ந்து வந்தவர் தம்பி அம்பேத்கர் வளவன் அவர்கள்.  அனைத்துக் கட்சியினரும், கட்சி சாராத அனைத்து சமூக அமைப்பினரும் மற்றும் இன்னும் பிற சனநாயக சக்திகளும் நேசிக்கவும் வாழ்த்தவும்கூடிய அளவுக்கு சீரிய சனநாயகப் பண்புகளும் அணுகுமுறைகளும் கொண்டவராக விளங்கினார்.  சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகவோஅல்லது அத்தகைய செயல்களுக்குத் துணைநின்றதாகவோ அவர் மீது இதுவரையில் புகாரோ வழக்கோ பதிவானதில்லை.  குறிப்பிட்ட எந்தவொரு சாதியினருக்கும் எதிராகவோ அல்லது தனிநபர்களுக்கு எதிராகவோ பகைமை தேடிக்கொள்ளும் அளவுக்கு முரட்டுத்தனமாகவோ மூர்க்கத்தனமாகவோ நடந்துகொண்டவர் அல்ல.  அத்தகைய பக்குவம் நிறைந்த பண்புநலன்களைக் கொண்ட தம்பி அம்பேத்கர் வளவன் ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்கான பிரச்சனைகளில் சமரசமில்லாப் போர்க் குணத்தோடு போராடி வந்தவர்.

அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்த ஒரு தம்பியை சமூக விரோதிகள் கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பிய நிலையில் தாக்கியவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்தி அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க காவல்துறையினரிடம் வற்புறுத்தியிருக்கிறார்.  தங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் துணிந்து புகார் செய்ததைச் சகித்துக்கொள்ள முடியாமல் அதே சமூகவிரோதக் கும்பல்தான் தம்பி அம்பேத்கர்வளவன் அவர்களை ஆதிக்கச் சாதிவெறியுடன் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்திருக்கிறது. 
 
விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் எழுச்சி தமிழகமெங்கிலும் சாதியச் சமூகக் கட்டமைப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும், அதனால் நிகழ்ந்துவரும் நெகிழ்வுப் போக்குகளையும், துளிர்விடும் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களையும் சகித்துக்கொள்ள முடியாத பிற்போக்குச் சக்திகள் தமது முகமூடிகளைத் தாமே கிழித்துக்கொண்டு வெளிச்சத்துக்கு வந்துள்ளன.  காலங்காலமாய் வஞ்சிக்கப்பட்டும், கொலை, கொள்ளை, தீ வைப்பு, பாலியல் வதைகள் உள்ளிட்ட ஈவிரக்கமற்ற சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டும் வருகிற ஏழை எளிய அப்பாவி மக்களுக்கு எதிராக மனசாட்சியோ மனிதநேயமோ துளியுமின்றி வெளிப்படையாகத் திட்டமிட்ட வன்முறைகளைத் தம்முடைய அரசியல் நலன்களுக்காகச் சிலர் தூண்டிவிடும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.   சாதிவெறியை மட்டுமே மூலதனமாகக் கொண்டுள்ள சாதியவாத பிற்போக்குச் சக்திகளையெல்லாம் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் ஆபத்தான போக்கு தலைதூக்கியுள்ளது.

தருமபுரி அருகே 6 மணி நேரம் நடந்த சாதிவெறியாட்டத்தைத் தடுக்கவோ, தலித் மக்களைப் பாதுகாக்கவோ துளியளவும் முனைப்புக்காட்டாத தமிழக அரசும் அதன் காவல்துறையும் தொடர்ந்து அமைதிகாத்து வருவது அத்தகைய சாதிவெறியர்களை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது.  சாதிவெறியர்களை ஊக்கப்படுத்தும் தமிழக அரசின் இத்தகைய அமைதிப்போக்கும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டும் சாதிவெறியர்களின் நடவடிக்கைகளும் சாதியவாத சமூகவிரோதக் கும்பலுக்கு உந்துதலாக அமைந்திருப்பதன் விளைவாகவே தம்பி அம்பேத்கர் வளவன் காஞ்சிபுரத்து வீதியில் வெளிச்சம் நிறைந்த பகுதியில் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்.  தமிழகத்தில் தலித் மக்களுக்கும் தலித் இயக்கத் தலைவர்களுக்கும் எத்தகைய பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது.

தருமபுரியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சாதிஒழிப்பு மாநாட்டிற்குத் திரண்டுவந்த விடுதலைச் சிறுத்தைகளின் வண்டிகளை சாதிவெறியர்கள் இருட்டுப் பகுதிகளில் ஒளிந்திருந்து பதுங்கியிருந்து கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.  விடுதலைச் சிறுத்தைகளின் விளம்பரப் பதாகைகளைக் கிழித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.  இத்தாக்குதலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வண்டிகள் சேதமடைந்துள்ளன.  இருபதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.  கடுமையாகக் காயமுற்ற இருவர் சேலம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இத்தகைய பதற்றமான சூழ்நிலையிலும்கூட தருமபுரிப் பயணத்தின்போது சாதிவெறியர்களால் குறிவைக்கப்படலாம் என்கிற அளவில்கூட எனக்கும் என்னுடன் வந்தோருக்கும் காவல்துறையினர் பாதுகாப்புத்தர முன்வரவில்லை என்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழகக் காவல்துறையின் இந்த ஒரு சார்பு நிலைப்பாடானது சாதிவெறியர்களை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைகிறது.  தமிழகத்தில் தென்மாவட்டங்களைத் தொடர்ந்து வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் சாதிவெறியாட்டம் வெகுவாகத் தலைதூக்கியுள்ளது.

தருமபுரி மற்றும் கடலூர் பகுதிகளில் நடந்தேறிய வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் அம்பேத்கர்வளவன் படுகொலை நிகழ்ந்துள்ளது.  இந்நிலையில் தமிழக அரசு தமது மெத்தனப்போக்கைக் கைவிட்டு வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

காஞ்சி மாவட்டத் துணைச் செயலாளர் அம்பேத்கர்வளவன் படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தமிழக அரசு உடனடியாக வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்.  அவரது குடும்பத்தினருக்கு உடனடியாக 
ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.  அவருடைய துணைவியாருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.  

சாதிவெறியர்களின், சமூக விரோதிகளின் இத்தகைய வன்கொடுமைகளுக்கு அஞ்சாமல், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் கொள்கைவழியில் சமத்துவத்துக்கான களத்தில் தொடர்ந்து போராட உறுதியேற்போம் என விடுதலைச் சிறுத்தைகளுக்கும் சனநாயக சக்திகளுக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.

ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைப் போராளி காஞ்சிபுரம் அம்பேத்கர்வளவனுக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்.

இவண்
தொல். திருமாவளவன்

1 comments:

காஞ்சி மாவட்டத் துணைச் செயலாளர் அம்பேத்கர்வளவன் படுகொலை வண்மையாக கண்டிக்கதக்கது. குற்றவாளிகளை உடனடியாக காவல்துற கைது செய்ய வேண்டும்.

11 டிசம்பர், 2012 அன்று PM 3:43 comment-delete

கருத்துரையிடுக