தொடர்ச்சியாக சாதிவெறியாட்டத்தில் ஈடுபடும் பிற்போக்குவாத சக்திகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்


தருமபுரியைத் தொடர்ந்து கடலூர் காச்சாரப்பாளையம்:
தொடர்ச்சியாக சாதிவெறியாட்டத்தில் ஈடுபடும்
பிற்போக்குவாத சக்திகளைக் கண்டித்து
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
தொல்.திருமாவளவன் அறிவிப்பு

தருமபுரி அருகே தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சாதிய வன்முறை வெறியாட்டத்தையடுத்து, கடலூர் மாவட்டம் வடலூர் அருகே காச்சாரப்பாளையம் என்னுமிடத்தில் 27-11-2012 அன்று தலித் மக்களின் மீது வெறித்தனமான தாக்குதல் நடைபெற்றுள்ளது.  தலித் மக்களைத் தாக்கியதுடன் வழக்கம்போல குடிசைகளுக்கும் தீ வைத்து சாதிவெறிக் கும்பல் வெறியாட்டம் நடத்தியுள்ளது.  இதில் 8 குடிசைகள் எரிந்துபோயுள்ளன.  நால்வர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தும் வழக்கம்போல காலந்தாழ்ந்தே அங்கே வந்துள்ளனர்.  வன்முறையில் ஈடுபட்ட சாதிவெறியர்களை விரட்டியடிக்கவோ, கைது செய்யவோ முனைப்புக்காட்டாத காவல்துறையினர், குறிஞ்சிப்பாடி அருகே சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகளை அச்சுறுத்தி விரட்டியுள்ளதோடு அவர்கள் மீதே வழக்கும் பதிவு செய்துள்ளனர்.  ஆனால் சேரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி தீ வைத்த கும்பலைத் தப்ப வைக்கும் வகையில் மெத்தனமாகவே செயல்பட்டுள்ளனர்.  வன்முறையாளர்களைக் கைது செய்ய வலியுறுத்தி மறியல் செய்வோம் என விடுதலைச் சிறுத்தைகள் அறிவிப்புச் செய்ததைத் தொடர்ந்து கண்துடைப்பாக தாக்குதலில் ஈடுபட்ட ஒருசிலரை காவல்துறை கைது செய்துள்ளது.

காச்சாரப்பாளையத்தில் நடந்துள்ள இந்த வன்முறைக்கு, தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்த பெண்களை தலித் இளைஞர்கள் கேலி செய்ததே காரணம் என்று வழக்கம்போல அப்பட்டமான பொய்ப் பிரச்சாரத்தை சாதிவெறியர்கள் திட்டமிட்டே செய்து வருகின்றனர். தம்முடைய ஆணாதிக்கப் போக்கிற்கும் சாதி வெறிக்கும் பெண்களைக் கேடயமாக அல்லது பகடைக் காயாக சாதி வெறியர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதையே இது உறுதிப்படுத்துகிறது.

தருமபுரியில் நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து, கடலூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டத்திற்கென அச்சிடப்பட்ட துண்டறிக்கைகளை அப்பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் அரசுப் பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளிலும் ஒட்டியுள்ளனர். இதனை தலித் அல்லாதவர்கள் கிழித்தெறிந்ததனால் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் தட்டிக்கேட்டுள்ளனர்.  இதற்காகவே சாதிவெறியர்களை ஒருங்கிணைத்து 200க்கும் மேற்பட்டோர் கொண்ட சாதிவெறிக் கும்பல் உருட்டுக்கட்டை, அரிவாள், கத்தி, கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சேரிக்குள் புகுந்து தலித் மக்களைத் தாக்கி, குடிசைகளுக்குத் தீ வைத்துள்ளனர்.

திருஞானம் என்கிற தலித் இளைஞர் அக்கிராமத்திலுள்ள தலித் மாணவ மாணவியருக்கு அரசு பொதுத் தேர்வுகள் எழுதுவதற்கான கட்டணமில்லாப் பயிற்சியினை வழங்கி வருகிறார்.  தலித் மக்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதை சகித்துக்கொள்ள முடியாமல், பெண்களைக் கேலி செய்தான் என்று அவதூறுகளைப் பரப்பி அவரையும் தலித் இளைஞர்கள் சிலரையும் குறிவைத்துத் தாக்கியுள்ளனர்.  அத்துடன் அப்பாவி மக்களின் குடிசைகளுக்கும் ஈவிரக்கமில்லாமல் தீ வைத்துள்ளனர்.  இத்தாக்குதல் நடப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக அப்பகுதியில் தலித் அல்லாத ஒரு குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்வில் சாதிவெறியைத் தூண்டும் வகையில், சில தலைவர்கள் மிகவும் கடுமையாக உரையாற்றியுள்ளனர்.  குறிப்பாக தலித் மக்கள் மீது வெறுப்பூட்டும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் அத்தலைவர்கள் பேசியுள்ளனர்.  அதன் எதிரொலியாகவே அக்கிராமத்தில் சாதி வெறியர்கள் தலித் மக்களைத் தாக்கியுள்ளனர்.

உழைக்கும் ஏழை எளிய மக்களிடையே அரசியல் ஆதாயம் கருதி திட்டமிட்டே மோதலைத் தூண்டி விடுவது, அடுத்தடுத்து வன்முறைகளுக்கு வித்திடுவது, இத்தகைய சமூக விரோத நடவடிக்கைகளை காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது போன்ற இந்தச் சூழல் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.  

தருமபுரி வன்முறையானாலும், காச்சாரப்பாளையம் வன்முறையானாலும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு சிலரின் திட்டமிட்ட தூண்டுதல்களால் விளைந்தவையே தவிர, தமது சாதிப் பெண்களைச் சீண்டினார்கள் என்று கூறுவது அப்பட்டமான பொய்ப் பிரச்சாரமேயாகும்.  சமூகத்தில் நலிந்த பிரிவினரின் நலன்களுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் சனநாயகச் சக்திகள், தம்முடைய நலன்களுக்காகப் பெண்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் ஆணாதிக்கப் போக்குள்ள சாதிவெறி சக்திகளின் நடவடிக்கைகளை உற்று கவனிப்பதுடன், அவர்களால் விளையவிருக்கும் தீங்குகளிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுவதற்கு முன்வரவேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

தலித்துகள் என்னும் ஒடுக்கப்பட்டோருக்கு எதிராக பெரும்பான்மையாக உள்ள ஆதிக்கச் சாதியினரைத் தூண்டிவிடுவதும், சாதியச் சக்திகளை ஒருங்கிணைப்பதும் போன்ற நடவடிக்கைகளை சனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள எவராலும் அனுமதிக்க முடியாது.  மேலும், தலித்துகளுக்கு எதிராக தலித் அல்லாதோர் இயக்கத்தை உருவாக்க முயற்சிப்பதும் தமிழகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்னும் கவலையை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், இத்தகைய பிற்போக்குவாத சக்திகளை எதிர்க்கும் வகையில் தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட பாட்டாளி வர்க்க நலன்களுக்காகப் போராடும் அரசியல் சக்திகளை ஒருங்கிணைத்து வரும் 3-12-2012 அன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது (தொல்.திருமாவளவன்) தலைமையில் நடைபெறுகிறது.  இப்போராட்டத்தில் பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த்தேசிய மற்றும் பிற சனநாயகச் சக்திகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அழைப்பு விடுக்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்

1 comments:

இந்த சமூகத்தால்
ஒவ்வொரு ஊரின்
ஒதுக்குப் புறங்களிலும்
கொட்டப்பட்டிருக்கும்
மனிதக் குப்பைகள்
வாழும் பகுதி சேரி
என்பதாலோ
எதெற்கெடுத்தாலும்
கொளுத்துகிறார்களே
குடிசைகளை - ஆனால்
கொளுத்துபவர்களுக்கு
ஓர் எச்சரிக்கை - ஒருநாள்
காற்றின் திசை
திரும்பக்கூடும்!!

--அன்பு

2 டிசம்பர், 2012 அன்று PM 12:41 comment-delete

கருத்துரையிடுக