இராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு விடுதலைச்சிறுத்தைகள் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் தொல். திருமாவளவன் அறிவிப்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக சிங்கள இனவெறியன் இராஜபக்சே இந்தியாவுக்கு வருகிறார்.
தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றி, இலட்சக் கணக்கில் தமிழர்களைக் கொன்று குவித்த போர்க் குற்றவாளி இராஜபக்சேவுக்கு, எந்த உயிருக்கும் சிறு தீங்கும் இழைக்கக் கூடாது என்று சொன்ன புத்தர் பெயரிலான கல்வி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க எந்த அருகதையும் இல்லை.
இராஜபக்சேயின் வருகைக்கு எதிராக அனைத்து இயக்கங்களும் போராடி வருகிற நிலையில், ஒட்டுமொத்தத் தமிழினத்தின் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும்விதமாக சேலத்தில் விஜயராஜ் என்ற இளைஞர் தீக்குளித்து தன் உயிரைப் போக்கியுள்ளார்.
இந்நிலையில் இராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்த பாரதிய ஜனதா கட்சியையும், அனுமதியளித்த காங்கிரஸ் அரசையும் கண்டித்தும், இராஜபக்சேவின் வருகைக்கு இந்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இராஜபக்சே வருகைதரும் 21-9-2012 காலை 10 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடும் போராட்டம் எனது (தொல்.திருமாவளவன்) தலைமையில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக