காமன்வெல்த் மாநாடு பிரிட்டிஷ் மகாராணியாரின் உதாரணத்தைப் பின்பற்றுக!


காமன்வெல்த் மாநாடு

பிரிட்டிஷ் மகாராணியாரின் உதாரணத்தைப் பின்பற்றுக!

இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்


இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என பிரிட்டிஷ் மகாராணியார் முடிவுசெய்துள்ளார்.  காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து மாநாடுகளிலும் கலந்துகொண்ட அவர் இலங்கை மாநாட்டைப் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியதாகும்.  பிரிட்டிஷ் மகாராணியாரின் இந்த அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

 காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில் இந்தியா அம்மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்று நாம் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறோம்.  தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் இதைக் கூறி வருகின்றன.  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் திரு. ஜி.கே.வாசன் அவர்களும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்களும்கூட இந்தக் கோரிக்கையை வழிமொழிந்துள்ளனர்.

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வ தென்பது அங்கு நடைபெற்ற இனப்படுகொலையை அங்கீகரிப்பதாகிவிடும்.  அது மட்டுமின்றி, காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள அத்தனை நாடுகளும் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்படும்.  எனவேதான் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாதெனவும் அவ்வாறு நடத்தப்பட்டால் அதில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது எனவும் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என இந்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக