தீக்குளித்த "வீரத் தமிழன்" ரவியும் மரணம்: மதுரையில் பல்லாயிரக்கணக்கானேர் வணக்கம்

இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிங்கள அரசின் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளித்த திண்டுக்கலைச் சேர்ந்த "வீரத் தமிழ் மகன்" ரவி இன்று காலை மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தார். அவரின் உடலத்துக்கு பல்லாயிரக்கணக்கானோர் வணக்கம் செலுத்தினர்.

முல்லைத்தீவு காடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்து வரும் சிங்கள படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மனமுடைந்த நிலக்கோட்டை குல்லாளகுண்டு என்ற சிற்றூரைச் சேர்ந்த ரவி (வயது 39) கடந்த இரு நாட்களுக்கு முன் தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் இன்று திங்கட்கிழமை இறந்தார்.


திருமாவளவன், வைகோ, நல்லக்கண்ணு


கதறியழும் "வீரத் தமிழ் மகன்" ரவியின் மனைவியை அமைதிப்படுத்தும் தலைவர்கள்


இறுதி ஊர்வலத்துக்கு தயாராகும் "வீரத் தமிழ் மகன்" ரவியின் உடலம்

ரவி இறந்த செய்தி அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் செந்தில்வேல் மத சார்பற்ற ஜனதா தள தலைவர் ஜோன் மோசஸ் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மதுரை இராஜாஜி மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனை வளாகத்தில் ரவியின் உடலம் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் அவர்கள் வணக்கம் செலுத்தினர். மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களும், மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தினரும், சட்டக்கல்லூரி மாணவர்களும் ரவியின் உடலுக்கு வணக்கம் செலுத்தினர். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் வணக்கம் செலுத்தினர்.


கதறியழும் "வீரத் தமிழ் மகன்" ரவியின் மனைவி, மகன்


ஊடகவியலாளர்களுக்கு பேட்டி வழங்கும் "வீரத் தமிழ் மகன்" மகன் ரவியின் மனைவி


ஊடகவியலாளர்களை சந்திக்கும் தலைவர்கள்

அங்கிருந்து ரவியின் உடலம் தத்தநேரி சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு எரிவளி மயானத்தில் எரியூட்டப்பட்டது.

அங்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், முத்துக்குமார் மற்றும் ரவியின் மகத்தான தியாகம் வீண் போகக்கூடாது.

எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவிருக்கும் பொது வேலை நிறுத்தமும், 7 ஆம் நாள் நடைபெறவிருக்கும் கறுப்புக்கொடி பேரணியும் வெற்றிகரமாக நடைபெற வேண்டும்.

"வீரத் தமிழ் மகன்" முத்துக்குமார் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபா நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டதைப் போல "வீரத் தமிழ் மகன்" ரவியின் குடும்பத்திற்கும் 3 லட்சம் ரூபா வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், மேடையிலேயே ரவியின் மனைவி சித்ராவிடம் முதல் தவணையாக ஒரு தொகையை வழங்கினார். தொடர்ந்து இரண்டு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.


சசிகலா கணவர் நடராஜன் வணக்கம் செலுத்துன்றார்


"வீரத் தமிழ் மகன்" ரவியின் இறுதி நிகழ்வில் ஈழத் தமிழர்களின் படுகொலைக் காட்சிகள்


இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்

இரங்கல் கூட்டத்தில் பேசிய வைகோ, ரவியின் மனைவி சித்ராவின் மீது இன்று காலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைவர் அறிவித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது என்றார். தொல். திருமாவளவன் பேசிய போது, ரவியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தப்படுத்துகிறார்கள். இந்தி எதிர்ப்பின் போது இறந்தவர்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்திய வரலாறு உண்டு. ரவியின் வாக்குமூலம் இன உணர்வை வெளிப்படுத்தியுள்ளது. அவரின் உணர்வுகளுக்குச் சான்றுகள் தேவையில்லை. முதல்வர் கலைஞர் ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் ஈழத் தமிழர்களுக்காக என்ன செய்வாரோ, அதைத்தான் நாங்கள் செய்கிறோம். ஈழச் சிக்கலில் பிரபாகரனைப் பிரித்துப் பார்க்க முடியாது. அவரின்றி பேச்சு நடத்தி தீர்வும் காண முடியாது என்றார். ரவியின் இறுதி ஊர்வலத்தின் போது கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே ஊர்வலத்தில் வந்தவர்கள் ராஜபக்சவின் உருவப்படத்தைத் தீயிட்டு எரித்தனர். அதே சாலையில் உள்ள காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் கே.எஸ்.கே. இராஜேந்திரன் வீட்டின் மீது மீது கற்கள் வீசப்பட்டன. உடனடியாக அங்கு வந்த நெடுமாறன், வைகோ, திருமாவளவன் ஆகியோர் சினமடைந்தவர்களை அமைதிப்படுத்தினர். மேலும் மத்திய அரசின் வாழ்நாள் காப்பீட்டு நிறுவனத்தின் மீதும் கற்கள் வீசப்பட்டன.


இந்திய தேசியக் கொடி தீக்கிரையாக்கப்படுகின்றது


சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் உருவப்படம் தீக்கிரையாக்கப்படுகின்றது


"வீரத் தமிழ் மகன்" ரவியின் இறுதி நிகழ்வில் ஈழத் தமிழர்களின் படுகொலைக் காட்சிகள்

நன்றி : புதினம்.காம்

1 comments:

I have seen a photo, where some of guys firing our flag, it is not acceptable. Please avoid publishing this sort photo it surly divert our current problem. Respect to our indian Flag.

9 பிப்ரவரி, 2009 அன்று 3:02 PM comment-delete

கருத்துரையிடுக