தேர்தலில் சிறுத்தைகளின் நிலை?








காங்கிரசுடன் பகை,

அதிமுகவுடன் எதிர்ப்பு,

திமுகவுடன் கசப்பு,

தேர்தலில் சிறுத்தைகளின் நிலை?


நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நெருங்கிவிட்டது. எதிர்வரும் மே 13இல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு தொடர்பான ‘காய் நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன.


முதன் முறையாக இந்தப் பொதுத்தேர்தலில்தான், ‘ஈழத் தமிழர் சிக்கல் முதன்மையான ஒன்றாக முன்வைத்து விவாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அத்தகைய நெருக்கடிக்கு தமிழக அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆறுமாதங்களாக முன்னெப்போதுமில்லாத அளவுக்கு சிங்கள இனவெறிப் போர், கொடூரமாகத் தலைவிரித்தாடுகிறது.ஈவிரக்கமற்ற இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர். கட்சிகளைச் சாராத வெகுமக்களிடமும் இந்தக் குமுறல் பரவியுள்ளது.


இந்நிலையில் தான், அரசியல் கட்சிகளும் தவிர்க்கமுடியாத நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. குறிப்பாக, ஈழத்தமிழர் சிக்கலில் நேரெதிரான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள அதிமுக, காங்கிரசு ஆகிய கட்சிகளே, ‘போரை நிறுத்து என்று குரல் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சிங்கள இனவெறி அரசு நடத்தும் ‘இனஅழித்தொழிப்புப் போர் மாந்தநேயமுள்ள ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாட்டையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால், இந்திய அரசும் இந்திய ஆட்சியாளர்களும் கல்நெஞ்சம் கொண்ட அணுகுமுறைகளைக் கையாண்டுவருவது சகித்துக்கொள்ளமுடியாத வேதனையை அளிக்கிறது. இதன் விளைவாகவே, கடந்த சனவரி 18 அன்று, மறைமலைநகரில் மேற்கொண்ட உண்ணாநிலை அறப்போரின் நிறைவில், “காங்கிரசைத் தனிமைப்படுத்துவோம்; வேரோடும் வேரடி மண்ணோடும் கில்லி எறிவோம்- என உறுதியேற்கும் வகையில் உரத்து முழங்கினோம்! அது அனைத்துச் சனநாயகச் சக்திகளையும் தட்டி எழுப்பியது.


அரசியலரங்கில், குறிப்பாக, காங்கிரசு வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அங்கிங்கெனாதபடி நாடுதழுவிய அளவில் காங்கிரசுக்கு எதிரான அலை உருவானது. இன்னும் அது கூர்மைப் பெற்று வருகிறது. இனமான உணர்வுகளில் ஊறிக்கிடக்கும் ஒவ்வொரு தமிழனின் ஆவேசத்தையும் காங்கிரசுக்கு எதிராகத் திருப்பியுள்ளது. தமிழினத்தின் எதிரியாக காங்கிரசை அடையாளப் படுத்தி குவிமைப்படுத்தியதில் விடுதலைச்சிறுத்தைகளுக்குத்தான் முதன்மையான பங்களிப்புள்ளது. இந்திய அரசை நோக்கி கோரிக்கை வைத்துப் பழக்கப்பட்ட தமிழக அரசியல் கட்சிகள், அது நிறைவேறாதபோது இந்திய அரசை விமரிசிக்கும் பணிகளை மட்டும் செய்துவந்தன. ஆனால், இந்திய அரசியல், ஆட்சியாளர்களின் பாத்திரத்தை அறிந்து அவர்களின் தமிழினத் துரோகத்தைத் தோலுரிக்கும் முயற்சியில் விடுதலைச் சிறுத்தைகள் களமிறங்கியது. தேர்தலைப் பற்றியோ, கூட்டணி நிலைப்பாடுகளைப் பற்றியோ கவலைப் படாமல், அழிவின் விளிம்பிலிருக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களையும் ஈழவிடுதலைப் போராட்டத்தையும் சேதமின்றி மீட்கவும் பாதுகாக்கவும் வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து விடுதலைச்சிறுத்தைகள் வெளிப்படையாக அறிவித்துச் செயலாற்றி வருகிறது.


அந்த நான்கு நாட்கள், மறைமலை நகரில் நடைபெற்ற உண்ணாநிலை அறப் போரின் நிறைவில் ஆற்றிய உரையானது, காங்கிரசைப் பதற வைத்ததைப் போல, விடுதலைச்சிறுத்தைகளின் அடுத்தடுத்த நகர்வுகள் அதிமுகவையும் நடுங்கவைத்தது. திடீரென கரிசனங்கொண்டு உண்ணாநிலை அறப்போரில் அதிமுக ஈடுபட்டதற்கு விடுதலைச்சிறுத்தைகளின் வெளிப்படையான நடவடிக்கைகளே, அறிவிப்புகளே முழுமுதற் காரணம் என்பதை எவராலும் மறுக்கவியலாது. கூட்டணி அரசியலுக்காக, அதிமுகவுடன் தேர்தல் உறவுகொள்ளவேண்டிய தேவையிருக்கும் என்பதற்காக அஞ்சவோ, தயங்கவோ செய்யாமல் ‘நெற்றியடி கொடுத்தாற்போல, அதிமுகவை தோலுரித்தது விடுதலைச்சிறுத்தைகள் மட்டுமே! பாரதிய சனதா, காங்கிரசு ஆகியவற்றின் தமிழகக் கிளைகள் அரசியல் அழுத்தத்தின் விளைவாக வேறு வழியின்றி, ஒப்புக்காகவாவது ‘போரை நிறுத்த வேண்டுமென்று குரல்கொடுக்கின்றன.


ஆனால், ‘போரை நிறுத்து என்று சொல்லாதது மட்டுமின்றி, ‘போர் நடந்தால் பொது மக்கள் சாகத்தான் நேரிடும் என்றும், ‘புலிகள் ஆயுதங்களைக் கீழேபோட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்றும் அறிக்கைவிட்டு, தமது தமிழின விரோதப் போக்கை வெளிப்படுத்திய ஒரே கட்சி அதிமுக மட்டுமே! இதனை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டி, பேசியதும் எழுதியதும் விடுதலைச்சிறுத்தைகள் மட்டுமே! தமிழினம் அழிவதைப் பற்றிக் கவலைப்படாமல், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஒரு பொருட்டாக மதிக்காமல், இனவெறியன் இராஜபக்சேவின் ஊது குழலாக செல்வி ஜெயலலிதா பேசுவது, எந்த அடிப்படையில்? என்ன துணிச்சலில்? தமிழனைக்கொண்டு அதிகாரத்தைச் சுவைக்கத் துடிக்கும் செல்வி ஜெயலலிதா, தமிழனுக்கு எதிராகவே பேசமுடிகிறது; செயல்பட முடிகிறது என்றால், அது எந்த அடிப்படையில்? தமிழினம் சிந்ததுப் பார்க்க வேண்டாமா? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது விடுதலைச்சிறுத்தைகள் மட்டுமே! தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கணக்குகளைப் போடாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஈழத்தமிழரைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டதனால்தான், காங்கிரசையும் அதிமுகவையும் மிகமிக வெளிப்படையாக விமர்சனங்களைச் செய்து அம்பலப்படுத்தியது. அதிமுகவுக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள் உருவாக்கிய இந்த அரசியல் நெடுக்கடியின் விளைவுதான், கடந்த மார்ச்சு-9 அன்று அதிமுக நடத்திய உண்ணாநிலைப் போராட்ட நாடகம்! இது தேர்தலுக்காக நடத்தப்பட்டது என்பது உலகமே அறிந்த உண்மைதான்! எனினும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வரவேற்றோம். அதாவது, அதிமுகவை இந்தக் களத்தை நோக்கித் தள்ளியது விடுதலைச்சிறுத்தைகளின் வெளிப்படையான நடவடிக்கைகளேயாகும். கூட்டணியில் இடம்பெற முடியாமல் போகுமே, தொகுதிப்பங்கீடு செய்ய இயலாமற்போகுமே, ஓரங்கட்டி ஒதுக்கிவிடுவார்களே என்றெல்லாம் எண்ணாமல், தயங்காமல் காங்கிரசையும் அதிமுகவையும், ஈழத்தமிழர் சிக்கல் தொடர்பாக அம்பலப்படுத்தியது விடுதலைச்சிறுத்தைகள். அதன் விளைவாகவே, அதிமுக தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு திடீர்க் கரிசனம் காட்டத் தொடங்கியுள்ளது.


தமிழ்நாடு காங்கிரசும், ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருள்களைத் திரட்டப் போவதாக அறிவிப்புச்செய்து அசடுவழிகிறது. காங்கிரசுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் பற்றவைத்த நெருப்பு காட்டுத் தீயாய் பரவிக்கொண்டிருக்கும் வேளையில், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள, மனிதாபிமான வேடம் புனைந்து நாடகமாடப் பார்க்கிறது. அதாவது, காங்கிரசை இத்தகைய நெருக்கடிக்குள் தள்ளியதும், அதிமுகவை காட்டாயத்தின் பேரிலாவது களமிறக்கிவிட்டதும் விடுதலைச்சிறுத்தைகளின் இயல்பான, வெளிப்படையான நகர்வுகளேயாகும்.


உள்ளாட்சி மன்றத் தேர்தலின்போது, திமுக கூட்டணியில் இணைந்த விடுதலைச் சிறுத்தைகள், திமுகவுடன் இணக்கமான உறவைத் தொடர்ந்தாலும், தோழமையோடு நேர்மையான விமர்சனங்களை வைக்கத் தவறியதில்லை. கூட்டணி உறவு பாதித்துவிடும் என்று அஞ்சி, எமது இயல்பான அணுகு முறைகளை மாற்றிக்கொள்ளவோ கருத்து மற்றும் செயல் தளத்தில் பின்வாங்கும் நிலையையோ மேற்கொண்டதில்லை.


கடந்த சனவரி 12ஆம் நாள், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோருடன் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்தித்த போது மனநிறைவு ஏற்படாததால், மாறாக மனஉளைச்சல் ஏற்பட்டதால்தான், சனவரி 15 முதல் சாகும்வரை உண்ணா நிலை அறப்போரில் இறங்கிடும் நிலை உருவானது. அந்த முடிவு திமுகவுக்கு, திமுக அரசுக்கு நெருக்கடியை, சிக்கலை உருவாக்கும் முடிவுதான் என்றாலும், அதனைத் துணிந்து எடுத்ததும் ஈழத்தமிழர் சிக்கலில் விடுதலைச்சிறுத்தை களுக்குள்ள உண்மையான ஈடுபாடேயாகும். திமுகவுடனான உறவு பாதிக்கப்படும் என்றோ, கூட்டணி உறவில் சிக்கல் ஏற்படும் என்றோ, தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்றோ, கணக்குப் போடாமல் அத்தகைய முடிவை மேற்கொண்டோம்.


அது திமுகவுக்கு, திமுக அரசுக்கு நெருக்கடியான சூழலை உருவாக்கியதனால்தான், “திருமாவளவனின் இந்த உண்ணாநிலைப் போராட்டம் அவரது தன்னிச்சையான முடிவு - என்று முதல்வர் கலைஞர் அவர்கள் அறிவிக்க நேர்ந்தது. “திருமாவளவனும் கருணாநிதியும் சேர்ந்து நடத்தும் நாடகம் இது - என்று செல்வி ஜெயலலிதா அவர்கள் திமுக அரசுக்கு நெருக்கடி உருவாக்கிட முயற்சித்ததும் அதனடிப் படையில்தான் என்பதை உணரலாம்.


காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையில் முரண்பாட்டை உருவாக்கவும், திமுகவுக்கும் விடுதலைச்சிறுத்தைகளுக்குமிடையில் சிக்கலை உருவாக்கவும் எமது உண்ணாநிலைப் போராட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த செல்வி ஜெயலலிதா முயற்சித்துப் பார்த்தார். மேலும், விடுதலைச்சிறுத்தைகள் திருமாவளவனின் உண்ணாநிலைப் போரைப் பயன்படுத்த நாடுதழுவிய அளவில் வன்முறையில் இறங்கியுள்ளனர் என்றும், அதனை திமுக அரசு வேடிக்கைப் பார்க்கிறது என்றும், இந்திய அரசுக்கு எதிராகவே, திமுக அரசு இப்படி விடுதலைச்சிறுத்தைகள் மூலமாக வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிடிநத்துள்ளது என்றும் மனம்போன போக்கில் அவதூறுகளைப் பரப்பினார். இந்நிலையில், காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் அஞ்சி, விடுதலைச்சிறுத்தைகளை மிகக்கடுமையாக திமுக அரசு வேட்டையாடியது.


விழுப்புரம், கடலூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, மதுரை போன்ற பல மாவட்டங்களில் சுமார் 360 பேரை காவல்துறை கைது செய்துள்ள்து. இன்னும் 200க்கும் மேற்பட்டவர்கள் பிணையில் வெளிவர இயலாமல் சிறையில் வாடுகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் 26 பேரை இதுவரையில் குண்டர்தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் ஓராண்டுக் கடுங்காவலில் சிறைப்படுத்தியுள்ளது திமுக அரசு. இன்னும் ஏராளமான முன்னணித் தோழர்களை கடந்த இரண்டு மாதங்களாக வீடுதிரும்ப விடாமல், பொய் வழக்கில் கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்க காவல்துறை தேடி அலைவதால், ‘முன்பிணை கேட்டு நீதிமன்றங்களில் அலைந்து திரிந்து அல்லலுற்று வருகின்றனர். இத்தகைய நெருக்கடிகளையெல்லாம் சந்திப்பதோடு திமுகவுக்கு எதிரான கட்சிகள் மற்றும் அமைப்புகளோடு சேர்ந்து ‘இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்பி கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக செயல்பட்டும் வருகிறது.


விடுதலைச்சிறுத்தைகள் திமுக கூட்டணியிலிருந்து விலகியோ அல்லது விலக்கப்பட்டோ இத்தகைய முடிவை மேற்கொள்ளவில்லை. ஈழத்தமிழர் பாதுகாப்பை மட்டுமே முன்னிறுத்தி, மறைமலை நகர் உண்ணாநிலை அறப்போராட்ட முடிவையும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க உருவாக்க முடிவையும் விடுதலைச்சிறுத்தைகள் மேற்கொண்டது.


திமுகவின் நட்புறவுப் பாதிக்கப்படும் என்றோ, அதனால் தேர்தல் கூட்டணி உறவிலும் சிக்கல் ஏற்படும் என்றோ அஞ்சாமல்தான் இத்தகைய முடிவுகளை விடுதலைச்சிறுத்தைகள் மேற்கொண்டது. அத்துடன், திமுக தமது ஆட்சியை இழக்கவும் தயங்கக் கூடாது என்றும், காங்கிரசைவிட்டு வெளியேறி, ஈழத்தமிழர் ஆதரவுக் கட்சிகளுக்குத் தலைமையேற்க வேண்டுமென்றும் வெளிப்படையாக அறைகூவல் விடுத்தது. அவ்வாறு திமுக முடிவெடுக்காத நிலையில், திமுக உறவைப் பற்றியே கவலைப்படாமல்தான், திமுகவை மிகக் கடுமையாக எதிர்க்கும் பா.ம.க., அதிமுக அணியிலேயே இருக்கும் மதிமுக சி.பி.ஐ. மற்றும் திமுகவின் போக்குகளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் திரு.பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையிலான ‘உலகத் தமிழர் பேரமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவதென்று விடுதலைச்சிறுத்தைகள் முடிவெடுத்தது.


இதனால், திமுக வருத்தப்படுமென்றோ, திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகளை வெளியேற்றிவிடுமென்றோ, காங்கிரசு அதிமுக கொடுக்கும்அழுத்தத்தால் எமது தோழர்களை கைது செடீநுதது போல், குறிப்பாக, திருமாவளவனைக் கைது செடீநுவார்களென்றோ சிறிதும் அஞ்சவில்லை; தயங்கவில்லை. ஈழத்தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்படுவதையும் விடுதலைப் புலிகளின் விடுதலைப் போராட்டம் நசுக்கப்படுவதையும் எதிர்த்து, மக்களைத் திரட்டிப் போராடுவது மட்டுமே எமது குறிக்கோள்! அதனால், காங்கிரசுடன் பகை! அதிமுகவுடன் எதிர்ப்பு! திமுகவுடன் கசப்பு! இப்போது விடுதலைச்சிறுத்தைகளின் தேர்தல் நிலைப்பாடு கேள்விக்குறி!


பா.ம.க. தலைமையில் மதிமுக, சிபிஐ, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட உடன்பாடுள்ள கட்சிகள் இணைந்து ஈழத்தமிழர் ஆதரவு கூட்டணியை உருவாக்குவதற்காக விடுதலைச்சிறுத்தைகள் மேற்கொண்ட முயற்சியும் நிறைவேறாத நிலை! தனித்துப்போட்டியிடும் அளவுக்கு பொருளாதார வலிமையற்றச் சூழல்!


உண்மையாய், நேர்மையாய் ஏற்றுக்கொண்ட ஞாயமான, மாந்தநேய அடிப்படையிலான கொள்கைக்காகப் போராடும்போது, இவ்வாறான இக்கட்டில், சிக்கலில் மாட்டிக்கொள்ளவே நேரிடுமென்பது யாம் அறிந்த ஒன்றுதான்! இத்தகைய சூழலில், தனித்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் தனித்துச் செயல்படுவதே சரியானதென்றாலும், தனித்தன்மையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தனிமைப்பட்டு அல்லது தனிமைப்படுத்தப்பட்டு விட்டால் ஒரு கை ஓசையாடீநு, ஓசையற்ற நிலையாடீநு ஒடுங்கிப்போகவும் நேரிடும்! தனித்தன்மையோடு இயங்கவேண்டுமென்பதைப்போல, தனிமைப்பட்டுவிடாமல் இயங்கவேண்டு மென்பதுவும் மிகமிக இன்றியமையாதது.


தேர்தல் ஆதாயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படவேண்டுமென்பதைப் போல, வெகுமக்களிடமிருந்தும் அரசியல் மைய நீரோட்டத்திலிருந்தும் அந்நியப்பட்டுவிடாமல் செயலாற்ற வேண்டுமென்பதுவும் மிகமிக இன்றியமையாததாகும். கொள்கை அடிப்படையில் தேர்தல் உறவுகளை அமைத்திட வேண்டுமென்பதைப்போல, வெற்றி அடிப்படையில் தேர்தல் உத்திகளை அமைத்திட வேண்டுமென்பதுவும் மிகமிக இன்றியமையாததாகும்.


கொள்கையும் கோட்பாடும் மிகமிக உயர்வானது. அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வெகுமக்களும் அரசியலதிகாரமும் மிகமிக இன்றியமையாதது. வெகுமக்களை அமைப்பாக்கவும், அரசியலதிகாரத்தை வென்றெடுக்கவும், நாடாளுமன்ற சனநாயகத் தேர்தல்பாதை தவிர்க்க முடியாதது.


தேர்தல்பாதையில் தனிமைப்படாமல் தனிமைப்பட்டுவிடாமல் வெற்றிகரமாக முன்னேறிச்செல்ல தேர்தல் கூட்டணி உறவுகள் இன்றியமையாதது. கூட்டணி உறவுகள், தேர்தல் பாதையில் கையாளப்படும் உத்திமுறைகளே தவிர கொள்கை உறவுகள் அல்ல!


கொள்கை - கோட்பாட்டைப் பாதுகாக்கவும் நடைமுறைப்படுத்தவும், கொள்கை அடிப்படையிலான தேர்தல் உறவுகளை அமைத்துக்கொள்ள இயலாதபோது, கடுமையான நெருக்கடிகளும் சிக்கல்களும் மிகப்பெரும் சவால்களாக எழுகின்றன.


ஈழத்தமிழர் சிக்கலை முன்னிறுத்தி, தொடர்ச்சியான அடுக்கடுக்கான போராட்டங்களாலும் அரசியல் நகர்வுகளாலும், தமிழகச் சூழலை கொந்தளிப்பாக்கியிருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் தனித்தன்மையை இழக்காமலும், தனிமைப்பட்டுவிடாமலும், இடைமறிக்கும் சவால்களை எதிர்கொள்ளும் சூழல்கள் நிறைந்த சூழலில் நிற்கிறது.



இழப்புகள் எவையாயினும் ஏற்றுக்கொள்வோம்! -

நம்மை இடைமறிக்கும் சவால்களை எதிர்கொள்வோம்!




இவண்

தொல்.திருமாவளவன்
(நமது தமிழ்மண் மார்ச் 2009 இதழில்)

0 comments:

கருத்துரையிடுக