முல்லைத் தீவில் இந்திய கடற்படையினர்- திருமா

முல்லைத் தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர் சென்னை விமான நிலையம் வழியாக சென்றிருக்கிறார்கள்.

இது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் பச்சை துரோகம் என விடுதலைத் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் ஈவு இரக்கமற்ற இனப் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பு. முப்படைகளும் நேரடியாக இறங்கி, விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்து வருகிறார்கள்.6.5 கோடி தமிழ் மக்களின் தலைவரான முதல்வர் கருணாநிதி இலங்கையில் போரை நிறுத்தக்கோரி இந்தியப் பிரதமரை நேரில் போய் சந்தித்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையிலும் மத்திய அரசு அதைப் பொருட்படுத்தாமல் உள்ளது.

இலங்கை முல்லைத் தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர் சென்னை விமான நிலையம் வழியாக சென்று இருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் பச்சை துரோகம்.விடுதலைப் புலிகளை பொறுத்தவரை இது ஒரு பின்வாங்கலே தவிர பின்னடைவு அல்ல. ஏற்கனவே பலமுறை இப்படி நடந்துள்ளது. பின்னர் விடுதலைப் புலிகள் கொரில்லா போர் முறை மூலம் தாக்குதல் நடத்தி சிங்கள படைகளை விரட்டி அடித்திருக்கிறார்கள்.அதே போல் கிளிநொச்சியை மீண்டும் கைப்பற்றுவார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுகஅரசு ஆழ்ந்து சிந்தித்து தமிழ் இனத்தை பாதுகாக்க இந்த நெருக்கடியான சூழ்நிலையில் துணிச்சலான முடிவெடுக்க வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஓர் அணியில் ஈழ -அனைத்து கட்சிகள் :

இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தேர்தல் அரசியலை மறந்து தமிழ் உணர்வு உள்ள அனைத்து கட்சிகளையும் ஓர் அணியில் திரட்டும் முயற்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈடுபட இருக்கிறது. இதற்காக பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் வீரமணி, தமிழ் தேசிய இயக்க தலைவர் நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை சந்தித்துப் பேச இருக்கிறேன்.

காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டதற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எங்கள் மீது வீண் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதுபற்றி நான் காங்கிரஸ் முன்னணி தலைவர்களிடமும், முதல்வர் கருணாநிதியிடமும் விளக்கி இருக்கிறேன்.திமுககூட்டணியில் சிக்கல் உருவாக்கவேண்டும் என்பதற்காக வீண் பழி சுமத்தி விடுதலை சிறுத்தைகளை பகடை காயாக பயன்படுத்த பார்க்கிறார்கள். தேர்தல் கூட்டணி என்பதற்காக தமிழ் இனம் முற்றிலுமாக அழிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு வாய் மூடி மவுனியாக இருக்க முடியாது.நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம், இருப்போம்.

பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியாது

பிரபாகரனை உயிருடன் பிடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது வெறும் பகல் கனவு. அவரை உயிருடன் பிடிக்க முடியாது. தப்பித்து ஓடவும் மாட்டார். எதிரியிடம் மண்டியிடாமல் தமிழ் மக்களுக்காக இறுதிவரை போராடி உயிரை விடுவேன் என்று பிரபாகரனே கூறி இருக்கிறார். எனவே அவரைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற வீரப்ப மொய்லியின் அற்ப ஆசை நிறைவேறாது.இலங்கைத் தமிழர் பிரச்சனையில் திமுக ஏற்கனவே பல தியாகங்கள் செய்திருக்கிறது என்றார்.இதற்கிடையே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் லதா அதியமானின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றனர். தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் செல்ல இயலவில்லை.மாற்று தரப்பை சார்ந்தவர்கள் பரப்பும் வீண் வதந்திகளுக்கு செவிசாய்க்காமல் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் முழு ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக